Friday 10 October 2014

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள்

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள்
உலக மக்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள் என சொல்லலாம். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள், ஆன்மீக தன்மை பற்றி உணர்வற்றவர்கள். இந்தஇரு பிரிவில் யார் உயர்ந்தவர்கள் என்றால், இருவரும் தான். பூமியின் ஏதாவது ஒரு பகுதி இரவு தன்மையை கொண்டு இருக்கிறது. அதற்காக அந்த பகுதியே எப்பொழுதும் இரவாகவே இருக்காது என சொல்லலாம். காலம் சுழலும் இரவு பகலாகும், பகலும் இரவாகும். ஆனால் பூமியில் தொடர்பற்று ஆகாய மார்க்கத்தில் இருக்கும் ஒரு வஸ்துவுக்கு இரவு பகல் என்பது கிடையாது. சூரியனில் ஏது இரவு ஏது பகல்? மனிதர்கள் பூமியில் தொடர்பு கொண்டு வாழ்வதால் அவர்களுக்கு மாற்றம் என்பது இருக்கிறது. ஆன்மீகவாதிகள் இதிலிருந்து விடுபட்டு உள்ளதால் காலத்தாலும், மாற்றத்தாலும் கட்டுவிக்கப்படாமல் விடுபட்டு இருக்கிறார்கள்.
ஆன்மீகவாதிகள் என்றவுடன் பாரத தேசத்தில் மட்டுமே இருப்பதாகவும், உலகில் வேறுபகுதியில் கடவுள் ஆன்மீகவாதிகளை வளரவிட மாட்டார் எனவும் பலர் எண்ணுகிறார்கள். வேத காலம் என ஒன்று இருந்தது. அக்காலத்தில் உலகமே ஒரு நாடாக இருந்தது. எல்லை பிரச்சனையில் பக்கத்து மாநிலத்துடன் சண்டையிடும் நமக்கு இதை சிந்திப்பது சிரமம் தான். வேத மந்திரம் “பாரத கண்டே” எனும் சொல் நமது உலகமே ஒரே கண்டமாக இருந்தது என உணர்த்துகிறது.
காலத்தால் கலாச்சார மாற்றம் அடைந்து பெரிய சேலையாக இருந்த பாரதம் பல சிறு துண்டங்களாக மாற்றம் அடைந்து கைக்குட்டையானது. உலகின் பிறபகுதிகள் கலாச்சார மாற்றம் அடைந்தாலும், பாரத தேசத்தில் மட்டுமே ஆன்மீகவாதிகள் பெருக காரணம் சூழல் தான். தாங்கள் செய்யும் ஆன்மீக சாதனைகள் (பயிற்சிகள்) இடையூறு வராதவண்ணம் சூழல் இங்கு இருக்கிறது. ஞானம் அடைய தனிமனித முயற்சி இருந்தாலும் அதற்கான சூழல் வேண்டும்.
திபத்தில் இருக்கும் மக்கள் முக்கியமாக ஓர் மந்திரத்தை சொல்லி கடவுளை வேண்டுவதுண்டு. “கடவுளே எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் என்னை பாரதத்தில் பிறக்க வை”- என்பதே அம்மந்திரம். வேறு இடங்களில் ஒரு மனிதன் பிறந்தால், தானே ஞானமடையும் முயற்சியில் இறங்க வேண்டுமாம். பாரதத்தில் பிறந்தாலே போதும் என்பது அவர்களின் எண்ணம். பாவம் அவர்களுக்கு தெரியாதே, நாம் துரித உணவகத்தில் உண்டு, கேளிக்கை செய்து, இனத்தை பெருக்கி மாண்டுவிடுவோம் என்பது...!
ஆன்மீகவாதிகள் என்றவுடன் நம் மக்களுக்கு சில எண்ணங்கள் உண்டு. கற்பனை உலகிலேயே வாழ்பவர்கள் தங்கள் நினைத்தது போல தான் பிறர்வாழ்கிறார்கள் என எண்ணுவார்கள். உண்மையில் ஆன்மீகவாதிகளின் நிலை ரகசியாமாக காக்கப்படுவதில்லை. மக்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்காததால் ரகசியமாகி விட்டது.கடலுக்கு அடியில் முத்து எடுக்க சென்றவன், தான் கடலின் ஆழத்தில் கண்டவற்றை கரையில் இருப்பவனுக்கு சொல்ல முடிவதில்லை. அது போல ஆன்மீக நாட்டமுள்ளவனும் பிறரிடம் தான் கண்ட ஆன்மீகவாதிகளை பற்றி வெளியே சொல்ல முடிவதில்லை.
ஆன்மீகம் என்பது மதம்,கலாச்சாரம், சடங்குகள், மொழி போன்றவற்றை கடந்தது. ஆன்மீகம் என்றவுடன் அனைவரும் மதத்துடன் அதை தொடர்புபடுத்தி குழப்பி கொள்கிறார்கள்.
ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பல நிலைகள் மற்றும் தன்மைகள் உண்டு. இயல்புவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களை பார்த்தால் வித்தியாசம் தெரிவதில்லை.
சாதுக்கள், சன்யாசிகள், ஸ்வாமிகள், யோகிகள், ரிஷிகள், மகரிஷிகள் என பல வடிவங்களில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரையும் நம் ஆட்கள் ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவார்கள் அது- “சாமியார்”
தாந்தீர்கம் செய்பவர்களும், மந்திரங்கள் மூலம் தீமை விளைவிப்பவரும் இங்கு ”சாமியார்” எனும் அடைவுக்குள் வந்துவிடுகிறார்.
தமிழகத்தில் சித்தர்கள் என சிலரை சொல்லுவதுண்டு. தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு சென்று சித்தர் பற்றி பேசினால், சித்தார் எனும் இசைகருவியை தான் காண்பிப்பார்கள். காரணம் சித்தர் எனும் பெயர்வழக்கு தமிழில் மட்டுமே உண்டு. யோகிகள் என்பவர்களை தான் நாம் சித்தர்கள் என தமிழ் “படுத்தி” இருக்கிறோம். இது போதாது என்று அவர்கள் பதினெட்டு எண்ணிக்கையில் தான் இருக்கவேண்டும் என கட்டயாம் வேறு படுத்துகிறோம். உண்மையில் சித்தர்கள் மதம் சார்ந்தவர்கள் அல்ல. தங்களை உடலாலும், உயிராலும் மேன்மை அடைய ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் எனலாம்.
நாம் எப்படி காவி காட்டிய அனைவரையும் சாமியார் என்கிறோமோ அது போல வட நாட்டில் அவர்களை “பாபா” என அழைப்பார்கள். பாபா என்றால் தந்தை அல்லது உயிர் கொடுத்தவர் என அர்த்தம்.
அங்கு அனைவரும் பாபா தான். மேல்தட்டு மக்கள் மஹராஜ் என அழைப்பார்கள். ரிஷிகள் அவர்களுக்கு அரசனை போன்றவர்கள்.[இந்த சொல்லாடலை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் பின்னால் இதை பற்றி பேசுவோம்.]
அகோரிகள் எனும் சொல்லாடலும் தமிழ் நாட்டில் சித்தர்கள் என நாம் சொல்லுகிறோமே அதன் வடமொழி வழக்குதான். தமிழில் வடமொழி சொற்கள் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஒருவனை பார்த்து “கேவலமானவன் நீ” என சொன்னால் அவர் என்ன நினைப்பார்?
வடமொழியில் “கேவல” எனும் சொல் தனித்துவமான - மேல்நிலையான என பொருள்படும். [உ.ம். கேவல சைதன்யம்- உண்னதமான துய்மை நிலை]. இப்பொழுது எதற்கு இந்த சமஸ்கிருத வகுப்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.
தினசரிகளில் கொடூரமான விபத்தை பற்றி எழுதும் பொழுது “கோரமான விபத்து” என எழுதுவார்கள் அல்லவா? கோரம் என்றால் “பார்க்க முடியாத அளவுக்கு”,“மனம் பாதிப்படையும் தன்மை உள்ள” என பொருள் கொள்ளலாம். இதற்கு எதிர்பதம் தான் அ-கோரம்.
ரம்மியமான, பார்த்தால் ரசிக்க தக்க நிலையில் இருப்பவர்களே அகோரர்கள். அகோரமான முகம் என தமிழில் இந்த சொல்லையும் தவறாகவே பயன்படுத்துகிறோம்.
அகோரமான நிலையில் இருப்பவர்கள் தான் அகோரிகள். வடநாட்டில் அனைவராலும் அகோரிகள் என அழைக்கப்படுபவர்கள் யோகிகளே. நாக சன்யாசிகள் அல்லது நாகா பாபா என அழைக்கப்படுபவர்களும் இவர்கள் தான். ஹிந்தியில் நங்கா என்றால் நிர்வாணம் என அர்த்தம். நங்கா பாபா எனும் சொல் வழக்கு பின்னாளில் நாகா பாபா என மாற்றமடைந்தது.
உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும் மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.இனிவரும் பகுதியில் இவர்களை யோகிகள் என அழைப்போம். தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.
தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள். உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.
யோகிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும் பெண் யோகிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம்.
இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. உடல் பயில்வானை போல இல்லாமல்,உடல் சீரான நிலையில் இருக்கும். ரிஷிகேசத்தில் இருந்த ஒரு யோகியின் புகைப்படம். இந்த படம் எடுக்கும் பொழுது அவருக்கு 85 வயது...!
தத்வவாலே பாபா
ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள். பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலய வனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம்.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும் , பின்னாலும் இருக்கும் யோகிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.
நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.
குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்ப மேளாவில் கஞ்சா எல்லா இடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள்.
தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டுவருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.
ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் 1 டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உற்கார்ந்து தியானம் செய்வார்கள்.
இப்படி பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.
ஏன் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? இவர்களுக்கு வேறு வேலை இல்லையா? இதனால் இவர்களுக்கு என்ன பிரயோஜனம்?
அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.
ஸ்வாமிகள் என்பவர்கள் ஆன்மாவை உணர்ந்தவர்கள், யோகிகள் என்பவர்கள் இறைநிலையில் இரண்டர கலந்தவர்கள், ஞானிகள் என்பவர்கள் இறைவனாகவே இருப்பவர்கள் என எளிமையாக விளக்கினாலும் உள்நிலையில் ஆன்மீகவாதி எப்படிபட்டவன் என கூறுவது கடினம். ஆன்மீக நிலையில் இருப்பவர்களின் நடை, உடை பாவனையை கொண்டு அவர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என நாம் முடிவு செய்வது கடினம்.
ராமகிருஷ்ணரும், ரமணரும் நமக்கு முன்னே தற்சமயம் வந்தால் கையில் இருக்கும் நாணயங்களை பிச்சையாக போட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம். உண்மையை அவர்களின் உள்நிலை உயர்வை நாம் உணரும் நிலையில் இல்லை.
காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என சொல்லிவிட முடியாது, அது போலவே உடைகள் இல்லாமல் இருக்கும் யோகிகள் ஆன்மீகவாதிகள் இல்லை எனவும் சொல்ல முடியாது அல்லவா?
அஹோரி எனும் இத்தகைய யோகிகள் பிரம்மாண்டமானவர்கள் என சொன்னால் மிகையில்லை. தங்களின் இறையாற்றலை உயர்ந்த நிலையில் பயன்படுத்துபவர்கள். தங்கள் வாழ்க்கையையே இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள். யோகிகள் இரு நிலையில் வகைப்படுத்தலாம்.அதாவது தன்முனைப்பு கொண்டவர்கள், சமூக முனைப்பு கொண்டவர்கள்.
தன்முனைப்பு கொண்ட யோகிகள் தங்களுக்கு என ஆன்மீக பயிற்சிகள் அமைத்து கொண்டு செயல்படுபவர்கள். சமூக முனைப்பு கொண்டவர்கள் சமூகத்தை அறவழியில் கொண்ட செல்ல செயல்படுபவர்கள்.
யோகிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என சொன்னேன், சில காரணங்களால் சமூகத்துடனும் கலந்து இருப்பார்கள். தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் வரும் எத்தனையோ ஆன்மீகவாதிகளில் இவர்கள் உண்டு. நமக்கு அவர்களை அடையாளம் காண்பது அரிது.
இமாலய மலை பகுதிகளில் ( யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.
யோகிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. இங்கே உடல் சக்தி என நான் குறிப்பிடுவது பூஸ்ட், காம்ளாண் குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.
தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். யோகிகளில் ஒரு பிரிவினர் ராணுவத்தை போல செயல்படுகிறார்கள். ராணுவ யோகிகள் சிலர் கையில் பெரிய ஆயுதங்களை வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். பாரதத்தில் சுதந்திர போராட்டத்தில் இவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.
உபநிஷத்தின் வார்த்தையான “சத்ய மேவ ஜெயதே” ஏன் இந்திய அரசின் தேசிய வார்த்தையாக இருக்கிறது? சுந்திர போராட்டத்தில் ஏன் காந்தி முன்னிருத்தப்பட்டார் ?
தமிழக சமூக சீர்திருத்தவாதிகள் ஏன் அடிக்கடி ரிஷிகேசம் சென்றார்கள் ? என பல காரணங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த ராணுவ படை, பல “நற்காரியங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.
நான் கும்பமேளாவில் நாக சன்யாசிகளின் கூடாரத்திற்கு அருகில் தங்க நேர்ந்தது. இருபது மணி நேரத்திற்கு மேலாக ஒரு நூல் கூட அசையாமல் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நாள் சரியாக நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். எனது கூடாரத்தின் வெளியே அமர்ந்திருந்தேன். குளிருக்காக பெரிய மரம் என் முன்னே எரிந்து கொண்டிருந்தது( தூஹ்ணி). யோகிகள் மொத்தம் பத்து முதல் இருபது பேர் இருப்பர்கள். சொல்லிவைத்தாற்போல அனைவரும் எந்த ஒரு சப்தமும் வராமல் எழுந்து நின்றார்கள்.
வரிசையாக நடந்து சென்று கங்கையாற்றில் இறங்கினார்கள். எழுந்து வந்து அருகில் இருக்கும் மயானத்தின் சாம்பல் கொட்டும் பகுதியில் புரண்டு விட்டு மீண்டும் வந்து தியானத்தில் அமர்ந்தார்கள். இத்தனையும் நடக்கும் பொழுது தங்களுக்குள் அவர்கள் பேசவில்லை. சைகைகாட்டவில்லை. அனைவரும் ஒரே உடலின் உறுப்பு போல கச்சிதமாக செயல்பட்டார்கள். அப்பொழுது தட்பவெப்பம் சுமாராக 4 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.
கும்ப மேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாதவண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம். அழைப்பிதல் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க , இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது? ஏதோ ஒரு சூட்சும சக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை. உயிர்சேதம் இல்லை.
யாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார். மற்றொருவரோ அனைவருக்கும் உணவு பொட்டலங்களை வினியோகம் செய்கிறார். இவர்களை தூண்டியது எந்த சக்தி?
தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். யோகிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு , பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்...! இவர்களை பொருத்தவரை ரிடையர்மெண்ட் என்பது நேரடியாக செட்டில்மெண்ட் தான்.
மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.
சென்ற பதிவில் இருந்த யோகியின் உருவத்தையும் , இவரின் உருவத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். சில உண்மைகள் புரியும். பரமஹம்ஸ யோகானந்தர் எனும் யோகி, தனது வாழ்வில் மஹாஅவதார் பாபாஜியை கண்டார். அதை மனதில் வைத்து வரைந்த உருவம் தான் இது.யோகிகள் பார்ப்பதற்கும் செயல்படுவதிலும் ஒன்று போலவே இருப்பர்கள். இவரை போன்ற அனேக யோகிகள் அருவமாக வாழ்வதுண்டு. யோகிகள் தங்கள் உடலை சில காலத்திற்கு மேல் வைத்திருப்பதில்லை, சூட்சம நிலையில் மாற்றிவிடுகிறர்கள்.
இறந்து போனவரை உயிர்த்தெழுக வைப்பது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.
யோகிகள் உயிர் அற்ற உடலை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என உணர்ந்து கொள்ள பிரிடீஷ் நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கு ஒன்றே சாட்சி.
அந்த வழக்கு...
நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ் வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்”
விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. நடந்தது இது தான்...
வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்த அரசன் (ஜமீந்தார், குறுநில மன்னன் என்றும் சொல்லலாம்) சில தவறான பழக்கங்களால் இள வயதில் நோய் கண்டான். அரசு மருத்துவர்கள் எத்தனையோ மருத்துவம் செய்தும் அரசன் உடல் நலம் மிகவும் நலிவுற்றது. 25 ஆம் வயதில் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருந்தான் அந்த அரசன். மலைவாழ்ஸ்தலங்களில் இருந்தால் சிறிது காலம் வாழலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். அரசன் தனது ராணி, மூன்று வயது மகன் மற்றும் பரிவாரங்களுடன் டார்ஜலிங் சென்றான்.
டார்ஜலிங் அப்பொழுது பிரிடீஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பிரிடீஷ்காரர்களுக்கு கப்பம் கட்டும் மன்னனாக இருந்ததால் அவர்களும் அரசனை வரவேற்றார்கள். அரசன் காலரா, பிளேக் போன்ற கொடுடிய நோய் கொண்டவனாக இருந்து அது பிறருக்கு பரவுமோ என ஐயம் கொண்ட பிரிடீஷ்காரகள் தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை கொண்டு மன்னனை பரிசோதித்தார்கள். அவருக்கு தொற்றகூடிய நோய் இல்லை என தெரிந்ததும் அனுமதித்து தங்கள் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அனுமதித்தனர்.
சில மாதங்களில் மன்னன் நோய் முற்றி இறந்தான். பிரிடீஷ் ஆதிக்க இடத்தில் இறந்ததால், அவர்களின் மருத்துவர் மன்னன் உடலை பரிசோதித்து இறப்பு சான்றிதழ் வழங்கினான். அரசனின் அரண்மனை வைத்தியரும் பரிசோதித்து மன்னன் இறந்ததை உறுதி செய்தார். மன்னனின் இறுதி சடங்கு கங்கை ஆற்றங்கரையோரம் டார்ஜலிங் அருகில் இருக்கும் ஒரு ஊரில் நடந்தது.
உடலுக்கு மூன்று வயது மகன் நெருப்பு மூடிய சில நிமிடத்தில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டு உடல் ஆற்றில் அடித்து சென்றது. உடல் தகனம் செய்ய வந்தவர்கள் ஆற்றுவெள்ளத்தில் மிதந்து மீண்டார்கள்.
கணவன் இறந்த துக்கத்தில் அரண்மனை வந்த ராணி தனது மகனுக்கு முடிசூட்ட தயாரானாள். ஆனால் ராணியின் தம்பி ஆட்சியை கைபற்றினான். இருவரையும் துன்புறுத்தினான். மக்களை கொடுங்கோலனாக ஆட்சி செய்தான்.
இதே சமயத்தில் காட்டின் ஒரு பகுதியில்..
கங்கை கரையின் ஓரத்தில் அந்த யோகிகள் கூட்டம் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் ஆற்றில் ஒரு பிணம் மிதந்து வருவதை பார்த்த தலைமை யோகி சைகை செய்தார். பிற யோகிகள் அந்த உடலை ஆற்றில் இறங்கி கரை சேர்த்தார்கள். மார்பில் சில பகுதிகள் மட்டும் தீக்காயத்துடன் இருந்த உடலின் கபாலத்தை திறந்து சில மூலிகைகளை சேத்து மீண்டும் மூடினார்கள். தினமும் இரு யோகிகள் அந்த உடலுக்கு காவல் இருந்தார்கள். உடல் முழுவதும் சவரம் செய்யப்பட்டு தினமும் சில “ரகசியமான செயல்கள்” மூலம் அந்த உடல் புத்துயிர் ஊட்டப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு உடலில் சில அசைவுகள் வரத்துவங்கின. மெல்ல நடக்கவும், உணவு உற்கொள்ளவும் அந்த உடலுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த உடல் , தான் யார் என்ற எந்த உணர்வும் அற்ற நிலையில், இருபத்திஐந்து வயது குழந்தையாகவே வலம்வந்தது.
பன்னிரெண்டு வருடங்கள் யோகிகளுக்கு உண்டான பயிற்சி அளிக்கபட்ட அந்த உடல் ஒரு கும்பமேளா நேரத்தில் யோகிகள் குழுவுடன் காட்டிலிருந்து நடக்க துவங்கியது. ஒர் இடத்தில் திடிரென டேரா அமைத்தார்கள். வட்டமாக பல மணி நேரம் யோகிகள் உட்கார்ந்து இருப்பது டேரா என அழைக்கிறார்கள். நெடுநாள் விருந்தாளிகள் நம் வீட்டில் தங்குவதை சொல்லுவோம் அல்லவா அதே வார்தை தான். யோகிகளின் குழு தலைவர் அந்த உடலை அழைத்து, சில யோக முறைகளை செய்து அவ்வுடலின் பழைய சம்பந்தத்தை மீண்டும் கொண்டுவந்தார்.
உடல் மீண்டும் மன்னன் ஆகியது. மன்னன் செய்ய வேண்டிய வேலையை கூறி டேராவிலிருந்து அனுப்பி வைத்தார்.மன்னன் மீண்டும் தனது நாட்டிற்கு வந்து தனது ஆட்சியை கேட்க, மன்னனின் மைத்துனன் ஏதோ மந்திரவாதி மன்னன் உருவில் வ்ந்திருப்பதாக சொல்லி விரட்டினான். சிலரின் துணையோடு பிரிடீஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் மன்னன். நீதிபதி விசாரணையை துவக்கி, மன்னன் இறந்ததையும் - மீண்டும் உயிருடன் வந்ததையும் உறுதி செய்தார். மன்னனுக்கு எப்படி உயிர் வந்தது என நீதிபதி கேட்க மன்னன் விளக்கியது தான் நீங்கள் மேலே படித்த வரிகள்.
மன்னன் உடலாக இருக்கும் பொழுது யோகிகளுக்கு உதவியாக தானும் பிற உடலுக்கு காவலாக இருந்ததையும் கூறினான். வழக்கு மேல்முறையீட்டுக்காக லண்டனில் இருந்த உச்ச நீதி மன்றதிற்கு மாற்றபட்டது. அங்கும் மன்னன் உயிர் பெற்றான் என்றும், யோகிகள் உயிர் அளித்தார்கள் என்றும் நிரூபிக்கபட்டது.
பிரிடீஷ்காரகள் மீண்டும் ஆட்சியை மன்னனிடம் கொடுத்தார்கள். பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு வளர்ந்த மகனுக்கு முடிசூட்டி மீண்டும் யோகிகளுடன் சென்று இணைந்தான் மன்னன். மன்னிக்கவும் யோகி.
மேற்கண்ட சம்பவத்தை நான் ஒரு யோகியிடம் இருந்து கேட்டு கதைவடிவில் தந்திருக்கிறேன். தகவல் உண்மையா என காண இங்கே இருக்கு சுட்டி இங்கே. சுட்டியில் உள்ள சம்பவங்கள் நீதிமன்ற விசாரணை தன்மையில் விவரிக்கபட்டுள்ளது..
என்ன செய்ய...? சாட்சி கொடுத்தால் தானே நம் மக்கள் இங்கே அனைத்தையும் நம்புகிறார்கள்.
இது போல எத்தனையோ சம்பவங்கள், நீதி மன்றத்தில் இது போன்ற விசித்திர வழக்குகள்.[திரு. ஷண்முகப்ரியன் கூறியது போல விமலானந்தா எனும் அகோரியின் வாழ்க்கை சம்பவம் கூட நீதிமன்றவழக்கு தான்]
இப்படி பட்ட அசாத்திய ஆற்றல் கொண்ட அகோரிகளுக்கு ஒரு பழக்கம். தங்களை பிறர் கவனிக்கிறார்கள் என தெரிந்தால் அவர்கள் அருவெருக்க தக்க செயல்களை செய்வார்கள். அதன் பின் அவர்களை பார்த்து ஓடிவிட செய்வார்கள். தங்களை பிறர் பின் பற்றவேண்டும் என விரும்ப மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம். உதாரணமாக அவர்கள் பூஜை செய்வதை கவனிக்க ஆரம்பித்தால் மலம் மற்றும் சிறுநீரில் பூஜை செய்ய துவங்குவார்கள். ..!
உங்கள் வைராகியத்தை நிரூபணம் செய்தால் அவர்களுடன் இணைத்து கொள்வார்கள். சிலர் இவர்கள் முன், தங்கள் உடல் உணர்வு இல்லாமல் வைராகியம் கொண்டிருக்கிறோம் என காட்ட பலர் தங்கள் பிறப்புறுப்பை கட்டையாலும், கம்பிகளாலும் பிணைத்து கொள்வார்கள். அப்படி பட்டவர்களை பார்க்கும் வெளிநாட்டுகாரர்களும் , நம் நாட்டுகாரர்களும் யோகிகளே அவ்வாறு இருப்பதாக நினைப்பார்கள். உண்மையில் இவர்கள் யோகிகளின் காலேஜுக்கு அட்மீஷன் கேட்பவர்கள் தான் யோகிகள் அல்ல.
நாக சன்யாசிகளுக்கு முன் தனது வைராக்யத்தை காண்பிக்கும் ஒருவர்.
காசி நகரத்தில் இவர்கள் வலம்வருவது உண்டு. காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது. [என்னடா இது... காசியை பற்றி கூட தனி பதிவு போடலாம் போல இருக்கே..! ]
சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல, மக்கள் யோகிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்துவிடுவார்கள்.
மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.
ஒரு பதிவர்கூட அகோர பசியால் மனித உடலை திண்பவர்கள் அகோரிகள் என பதிவிட்டுருந்தார். அதை கண்டு மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை. வீடியோவிலோ அல்லது இது போன்ற பதிவையோ படிக்க நேர்ந்தால் யோகிகளை மாந்திரீகர்கள் இடமிருந்து வித்தியாசம் காட்ட சில தன்மைகளை கூறிகிறேன்.
யோகிகளின் லட்சணங்கள் :
யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.
கும்ப மேளாவில் ஆரம்ப நிலை யோகிகளின் அணி வகுப்பு
கடந்த சில பதிவுகளாக யோகிகளை பற்றி எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டேன். எனக்கும் அவர்களுக்கும் நடந்த பல சுவையான சம்வங்கள், தமிழகத்தில் இவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
அமானுஷ தன்மையை கூறியும், யோகிகள் உயர்ந்தவர்கள் என கூறியும் இவர்களை பின்பற்ற சொல்லுவதற்காக நான் இந்த பதிவு இடவில்லை. இவர்களை பின்பற்ற சொல்லுவது கூட இவர்களுக்கு பிடிக்காது என்பதே உண்மை. இவர்களை வணங்க தேவையில்லை குறைந்த பட்சம் அசிங்கப்படுத்தாமல் இருக்க முயற்சிப்போம்